“பிக் பாஸ் ஆரம்பிக்குறதுக்கு ரெண்டு நாள் முன்னாடிதான் எனக்கு வாய்ப்பு வந்துச்சு. இந்த குறுகிய காலத்துல யார்கிட்டயும் எதையும் டிஸ்கஸ் பண்ண முடியல. மொதல்ல தயக்கமா இருந்தாலும் அந்த நேரத்துல மீடியா வெளிச்சம் வேணும்னு தோணுச்சு. நான் இதுக்கு முன்னாடி ஹிந்தி, இங்கிலிஷ் பிக் பாஸ் பார்த்ததில்லை. என்னோட மனைவிதான் எனக்கு மிகப்பெரிய பக்க பலம். அப்பாகிட்ட நான் பிக் பாஸ்க்கு போறேன்னு சொன்னேன். அவர் உன் இஷ்டம்னு சொல்லிட்டாரு. எல்லாத்தயும் என் இஷ்டத்துக்கு பண்ண விடுற அன்பான அப்பா" என்று குடும்பத்தைப் பற்றி பேசும் போது நெகிழ்கிறார் சக்தி. இந்த பிக் பாஸ் சினிமா குடும்பத்தோட ஒரு மீட்...!
“சோஷியல் மீடியா கமெண்டுகளைப் பார்த்ததும் அதிர்ச்சியா இருந்துச்சா?"
"பிக் பாஸ் வீட்ல இருந்து வெளிய வந்த உடனேயே அப்பாக்குத்தான் போன் பண்ணேன். அவர், 'நீ எதுக்கும் கவலை படாத. நல்ல விதமாகத்தான் வெளிய வந்துருக்க'னு சொன்னார். அம்மா எனக்கு கெட்ட பேர் கெடைச்சதை நெனச்சு கொஞ்சம் அழுதாங்க. அப்போ,'நான் பத்து வருஷமா நல்ல பேர் எடுத்துட்டேன். கெட்ட பேர் வர்றது மீடியால சாதாரணம்'னு சொல்லி சமாதானப்படுத்தினேன். ஆனா, என்னோட மனைவி ரொம்ப தைரியமா இருந்தாங்க. நானும் ஏதும் தப்பு பண்ணலைனு எனக்கு தெரியும். வெளிய இருக்குறவங்களுக்கு தெரியுமானு தெரியல. நீங்க பார்க்குறது ஒன்றரை மணி நேர நிகழ்ச்சிதான். அதுல ஸ்கிரிப்ட் எதுவும் கிடையாது. ஆனா எந்தந்த காட்சிகளையெல்லாம் கோர்வை படுத்தணும்னு ஒரு ஸ்கிரிப்ட் இருக்கு. ஒருத்தனை நல்லவனாக்குறதும், கெட்டவனாக்குறதும் பிக் பாஸின் செயல். நான் செஞ்ச சின்ன சின்ன தவறுகளை எடுத்துக் காட்டுனாங்களே தவிர, நல்ல விஷயங்களை எடுத்துக்காட்டவே இல்ல. அதை நான் சீரியஸாகவும் எடுத்துக்கல."
"வீட்டை விட்டு பிரிந்திருந்த தருணம் பத்தி"
"எல்லாரையும் பிரிஞ்சு இருந்தது இதுதான் முதல் முறை. என்னோட மகன் ஹர்ஷத்தான் என்னை அதிகமா மிஸ் பண்ணான். நான் திரும்பி வந்ததுக்கு அப்பறம் என்னை விட்டுட்டு ஒரு நிமிஷம் கூட இருக்கல. தூங்கும் போதும் கூடவே இருக்கணும்னு அட பிடிச்சான். இவன் இந்த மாதிரியெல்லாம் முன்னாடி நடந்துக்கிட்டதே இல்ல. அப்பாவைப் பிரிந்திருந்த ஏக்கம் அவன் கிட்ட நல்லா தெரிஞ்சுச்சு.
வெளிய வந்ததுக்கு அப்பறம், நம்ம எல்லாரையும் சீக்கிரமா நம்பி ஏமாந்துட்டோம்னு தோணுச்சு. நம்மள மட்டும்தான் நம்பணும்னு முடிவெடுத்தேன். எல்லாம் தெரிஞ்சு மறுபடியும் வீட்டுக்கு போறப்போ ரொம்ப தெளிவா இன்னும் உறுதியா இருந்தேன். எல்லாருக்கும் மறுபடி என்கிட்ட பேசுறதுக்கு ஒருவித தயக்கமும், பயமும் இருந்துச்சு. காரணம் நான் எந்தத் தப்புமே பண்ணலன்னு அங்க உள்ளவங்களுக்குத் தெரியும். என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு என்னை பத்தி இன்னும் ஒருபடி அதிகமான புரிதலை பிக் பாஸ் கொடுத்துருக்கு. இலகுன மனசு இருக்குற எனக்கு அதீத மனஅழுத்தம் ஏற்பட்டுச்சு. அதுல இருந்து நிறைய கத்துக்கிட்டு இப்போ நலமா இருக்கேன்."
"வீட்டுக்குள்ள உங்களுக்கும் காயத்ரி ரகுராமுக்கும் நல்ல நட்பு இருந்துச்சு. இப்போ நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து Mrs. சின்னத்திரைங்கிற நிகழ்ச்சிக்கு நடுவர்களா இருக்குறீங்க. இப்போ உங்களோட நட்பு எப்படி இருக்கு?"
"அப்படியேதான் இருக்கு. பிக் பாஸ் வீட்டுக்குள்ள இருக்கும் போதே எங்களுக்கு இந்த நிகழ்ச்சிக்கான வாய்ப்பு வந்துருச்சு. அப்போவே நாங்க கமிட் ஆகிட்டோம். இது எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி ஒரு நிகழ்ச்சியா அமையும்கிற நம்பிக்கை இருந்துச்சு. 4 எபிசோடு வெற்றிகரமா முடுஞ்சுருச்சு, இன்னும் சில எபிசோடுகள் வரை இந்த நிகழ்ச்சி போகும்.
காயத்ரி இப்பவும் அப்படியேதான் இருக்காங்க. 'நான் ஹேர்னு சொன்னது மக்களுக்கு பெருசா தெரியுது. ஆனா, ஓவியா இங்கிலீஷிலே கெட்ட வார்த்தை சொல்லி திட்டுனது மட்டும் நல்ல விதமா தெரிஞ்சுருக்கு'கிற மைண்ட் செட்ல இருக்காங்க."
“சக்தியின் பிக் பாஸ் முகத்தை தாண்டி நிஜ வாழ்க்கையில் எப்படிப் பட்டவர்?"
"தன்னை ஒரு நடிகன்னு காட்டிக்காத அளவுக்கு அமைதி. என்னுடைய மகன் என்பதை தாண்டி நாங்க ரெண்டு பேரும் ஸ்கிரிப்ட் பத்தி டிஸ்கஸ் பண்ணும் போது அதிகப்படியான விமர்சனங்கள முன் வைப்பான். சினிமா பத்தி ஏகப்பட்ட விஷயங்கள் சக்திக்கு தெரியும். ஒருதடவை சக்தி கன்னடப் படத்துல நடிக்கும் போது மொழி பிரச்னை இருந்துச்சு. அப்போ அவனுக்கு கன்னடம் சுத்தமா தெரியாது. ஸோ, ப்ராம்ப்ட்டிங் பண்ண சொன்னேன். அப்போ சக்தி, 'எனக்கு ப்ராம்ப்ட்டிங் கொடுத்தா வசனம் சரியா பேச வரமாட்டேங்குதுனு வசனத்தை முழுசா மனப்பாடம் பண்ணிட்டான். அந்த அளவுக்குத் திறமைசாலி. அந்தத் திறமையை எந்த இயக்குநரும் உபயோகப்படுதலனு நினைக்கும் போதுதான் கொஞ்சம் வருத்தமா இருக்கு. நான் எதாவது செய்யலாம்னு பார்த்தா அப்பா- மகன்ற உறவை வச்சு எதாவது பேச ஆரம்புச்சுடுவாங்க.
தொட்டால் பூ மலரும் படத்துல சக்தியை அறிமுகப் படுத்தும் போது ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டேன். 'நீ என் கார்ல வரக்கூடாது. அப்பான்றதைத் தாண்டி என்னை இயக்குநராத்தான் பார்க்கணும்'னு. சினிமா வேற, குடும்பம் வேற என்பதை அவனுக்கு கத்துக் கொடுத்திருக்கேன்.
வீட்ல எல்லாரும் ஒன்னா இருக்கோம். ஒன்னாதான் மதிய சாப்பாடு சாப்பிடுவோம். ஒருநாள் சக்தியை பிரிஞ்சு இருந்தாலே எங்களால தாங்க முடியாது. நான் வெளியூர் போனாலும் எனக்கு குடும்பத்தோட நெனப்பாவே இருக்கும். ஏன்னா, சின்ன வயசுல சொந்தக்காரவங்க அத்தனை பேரும் சக்தியை தூக்கி வளர்த்தாங்க. கல்யாணம் ஆனதுக்கு அப்புறமும் எங்களோட கூட்டுக்குடும்பம் மாறல. அப்படிப்பட்ட குடும்பம் இருக்கும் போது பாசத்துக்கு பஞ்சமும் இல்ல."
"சக்தி அடுத்தடுத்து படங்கள்ல ஏன் நடிக்கலை?"
"சரியான பட வாய்ப்புகள் இயக்குநர்கள் கிட்ட இருந்து கிடைக்கலை. நிறைய பேர் கதை சொன்னாங்க. நான் அந்தக் கதைகளை படிச்சுட்டு நிறைய பரிந்துரைகள் பண்ணேன். இருந்தாலும் கடைசியில அவங்க என்ன எடுக்கணும்னு விருப்பப்படுறாங்களோ அதைத்தான் படமா எடுத்தாங்க. சில விஷயங்கள் நம்ம கையில கிடையாது. நடிகராகுறதும் வெற்றியைத் தொடுறதும் அப்படித்தான். சில நடிகர்கள் வெற்றி அடைந்த பின்பும் தோல்வியை தழுவலாம்.
சக்தி நடிச்சதுல மனசுக்கு ரொம்ப நெருக்கமான திரைப்படம் 'நினைத்தாலே இனிக்கும்'. கல்லூரி-காதல்-நட்பு எல்லாத்தையும் ஒரே வட்டத்துக்குள்ள கொண்டுவர்ற திறமை இயக்குநர் குமரவேலனுக்கு இருக்கு. எம். ஜி ஆர், சிவாஜி. ரஜினி, கமல், விஜய், அஜித் இப்படி எல்லாருக்குள்ள இருக்குற திறமையை வெளிக்கொண்டு வர்றது இயக்குநர்கள்தான். நல்ல கதை கிடைச்சா கண்டிப்பா சக்தி நடிப்பான். அதுல நோ டவுட்."
"பிக் பாஸ் பார்த்துட்டு சினிமா பிரபலங்கள் சக்தியை பத்தி பேசிருக்காங்களா?"
"ஒரு மனுஷன் எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்க முடியாது. கோவம், அழுகை, சிரிப்பு, வெறுப்பு, அன்பு எல்லாம் கலந்த கலவையாத்தான் இருக்க முடியும். அதுல ஒருத்தரோட கோபத்தை மட்டும் காட்டுறது. இன்னொருத்தவங்க சந்தோஷப்படுறதை மட்டும் காட்டுறது மாதிரியான விஷயங்கள் பிக் பாஸ்ல இருக்கு. அப்படி பார்க்கும் போது பல பேரோட ரியல் கேரக்டர், திறமைகள் வெளிப்பட்டுச்சு. யாரெல்லாம் அந்தநாள்ல தப்பு பண்ணாங்கன்னு குறும்படம் பார்த்து தெரிஞ்சுக்கலாம். எனக்கென்னமோ பிக் பாஸ் வீட்டுக்குள்ள உளவியல் ஆலோசகர்கள் வேலை பார்க்குறாங்கன்னு நெனக்கிறேன். ஒரு கேரக்டரை எப்படி ஃபாலோ பண்றதுனு அவங்களுக்கு நல்லா தெரிஞ்சுருக்கு. அப்படிப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி பத்தி என்கிட்ட பேசாம இருப்பாங்களா?
நிறைய பேர், 'நீங்க நிஜமாவே சக்தியை பார்க்கலையா. இல்ல ராத்திரியானா வீட்டுக்கு வந்துருவாரா?னு கேட்டாங்க. சிபி சத்யராஜ் சக்திக்கு நல்ல நண்பர். 'எதுவா இருந்தாலும் முகத்துக்கு நேரா பேசுறதுதான் சக்தியோட குணம்'னு சிபி சொன்னார்.
"கமலோட அரசியல் பிரவேசம் பத்தி என்ன நெனைக்குறீங்க?"
"அவர் ஒரு அதிரடி அரசியல் திட்டம் மைண்ட்ல வச்சுருக்கார். கமல் திறமைசாலி ப்ளஸ் புத்திசாலி. ஆளவந்தான் மாதிரியான படங்களை பார்க்கும் போது அதெல்லாம் இந்த காலகட்டத்துல எடுக்க வேண்டிய படம். கமல் முன்னாடியே எடுத்துட்டார்னு தோணுது. அந்த மாதிரி தொலை நோக்குப் பார்வை உள்ளவர். அவர் பண்ற படங்கள் மாதிரி அரசியலும் எதிர்காலத்தை நோக்கி ஒரு படி முன்னேற்றத்தோட இருக்கும். பிக் பாஸ்ல போட்டியாளர்கள் மட்டும் வாழ்க்கை பாடம் கத்துக்கலை. கூடவே கமலும் நிறைய காத்துக்கிட்டார். மக்கள் எந்த இடத்துல ஒருத்தரை வெறுப்பாங்க? எப்படி இருந்தா ஆதரிப்பாங்க? எதனால கோபப்படுவாங்கனு நல்லா தெரிஞ்சுக்கிட்டிருப்பார். இந்த அனுபவம் அவரோட அரசியலுக்கு துணை நிக்கும்."
“கமல் வச்சுப் படம் பண்ணுவீங்களா?"
"அவர் அரசியல்ல என்ட்ரி கொடுக்குறதுக்கு முன்னாடி அவருக்கு ஆர்வம் இருந்தா, கண்டிப்பா படம் பண்ணுவேன். அவருடைய மனநிலை எப்படி இருக்குனு பார்ப்போம். தன்னை எப்படி நிலை நிறுத்தப் போகிறார் என்பதை பொறுத்துதான் எல்லாமே இருக்கு. அவர் தொடர்ந்து நடிக்கிறதா இருந்தா கட்டாயம் படம் பண்ணிடலாம்."
"கமல் மூன்று வேடங்கள்ல நடிக்கிற கதையா?"
"இல்லவே இல்ல. அந்தக் கதையை வேட்டையாடு விளையாடு பட ஷூட்டிங் முடிஞ்சதும் அவர் கிட்ட சொன்னேன். போலீஸ் ஸ்டோரிக்கு அப்பறம் ஒரு கிராமத்து கதாபாத்துரத்துல நடிச்சா நல்லா இருக்கும்னு நெனச்சேன். அவருக்கும் அந்தக் கதை ரொம்பவே பிடிச்சுருந்துச்சு அந்த சமயத்துலதான் கே. எஸ் ரவிகுமாரோட தசாவதாரம் பட வாய்ப்பும் வந்துச்சு. அடுத்தடுத்து இந்த மாதிரியான ரெண்டு படங்கள்ல நடிச்சா கமல் 13 வேடங்கள்ல நடிச்சிருக்கார்கிற பேச்சு வரும்னு கமல் ஃபீல் பண்ணார். அதனால கொஞ்ச காலத்துக்கு அப்பறம் அந்தப் படம் பண்ணலாம்னு சொன்னார். அப்போ கே. எஸ் ரவிக்குமார் எனக்கு தசாவதாரம் படத்துல சின்ன கேரக்டர் கொடுத்தார். அப்போ ரவிக்குமார், 'நீங்களும் கமலும் நல்ல ரிலேஷன்ஷிப்ல இருக்கலாம். இந்த ரோல்ல நடிங்க'னு சொன்னார். அப்போ நான், 'ரவி எனக்கு ரஜினி எந்த அளவுக்கு பழக்கமோ அதே அளவுக்கு கமலும் பழக்கம். சொல்லப் போனா, ரஜினி கிட்ட பேசுறதை விட கமல் கிட்ட இன்னும் நெருக்கமா பேசுவேன். அவரும் என்கிட்ட நிறைய விஷயங்களை பகிர்ந்துக்குவார். அவர் கால் உடைஞ்சு உடல்நிலை சரியில்லாதப்போ நான் முதல் ஆளா அவரை போய் பார்த்தேன். அப்ப, 'நான் படியில் விழுந்து காலை உடைச்சுக்கிட்டேன்னு மீடியாவுல சொல்றாங்க. உண்மை அது இல்ல. என் வீட்டு ஜன்னல் கிட்ட இருக்குற சன் ஷேட்ல உட்கார்ந்து கவிதை எழுதிட்டு இருந்தேன். அது அப்படியே உடைஞ்சு விழுந்துருச்சு'னு சொன்னார். அப்படி எல்லாத்தையும் பகிர்ந்துகிற அளவுக்கு நாங்க நல்ல நண்பர்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில கூடகமல் சக்தி கிட்ட, 'உங்க அப்பாவுக்கு என்ன ரொம்ப நல்லா தெரியும்'னு சொல்லிருக்கார். அவரை பார்த்தா எனக்கு அப்படியே பிரபுவை பார்க்குற மாதிரி இருக்கு. அத்தனை வருடப் பழக்கம்."
“பழைய இயக்குநர்கள் எல்லாரும் சீரியலை நோக்கி போறாங்களே. நீங்க சீரியல் இயக்குநரா மாறுவீங்களா?”
“சன் டிவியில முதன் முறையா 1992-ல 'சக்தி'னு தொடர் பண்ணாங்க. பானு ப்ரியா ஹீரோயினா நடிச்சாங்க. அதோட கிரியேட்டிவ் ஹெட் நான்தான். அதனால என்னோட ப்ரொடக்ஷன்ல சீரியல் வெளிவரலாம். ஆனா, நான் கட்டாயம் சீரியலை இயக்க மாட்டேன்.
ஐஸ்வர்யா ராய் வச்சு படம் பண்ணணும் முடிவெடுத்து அவங்ககிட்ட கதை சொன்னேன். ஆனா, அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் முன்னரே படத்தை பத்தின தகவல்கள் வெளிவந்துருச்சு.
இப்போ அந்தப் படத்தை காஜல் அகர்வாலை வச்சு பண்ணலாம்னு முடுவெடுத்து தகவல்களையும் மீடியாவுக்கு ஏற்கனவே கொடுத்துட்டேன். அடுத்த வருஷம் படத்தை எதிர்பார்க்கலாம்" என்று முடித்தார்.

No comments:
Post a Comment