விருச்சிக ராசிக்கு தற்போதுள்ள நான்கு, பத்தாம் இடங்களில் இருந்து சர்ப்பக் கிரகங்கள் என்று சொல்லப்படும் ராகு-கேதுக்கள் மூன்று, ஒன்பதாம் இடங்களுக்கு இன்று மாறுகிறார்கள்.இம்முறை ராகு-கேது பெயர்ச்சியில் விருச்சிக ராசிக்கு நன்மைகள் மட்டுமே இருக்கும் என்பது நிச்சயம்.
கடந்த சில ஆண்டுகளாக விருச்சிகராசியினர் ஏழரைச் சனியின் தாக்கத்தினால் கடுமையான நிலையை சந்தித்து கொண்டிருந்தார்கள்.
விருச்சிகத்தினரின் நிலை:
யாராவது ஒருவர் உங்களுடைய கஷ்டமான நிலைமையை பார்த்து உதவலாம் என்று முன் வந்தால் கூட, சாதகமற்ற கிரகங்களின் ஆதிக்கத்தினால் மனம் இருந்தும் உதவி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருப்பார்கள்.’
இதுபோன்ற உதவிகள் அற்ற நிலை இனிமேல் இல்லாத வண்ணம் கேட்கும் இடத்தில், உதவிகள் கிடைக்கின்ற ஒரு நிலையை தற்போது மூன்றாமிடத்திற்கு மாற இருக்கும் கேதுபகவான் உங்களுக்கு அருளுவார்.
பெயர்ச்சி:
ராகு- கேது பெயர்ச்சியை அடுத்து நடக்க இருக்கும் குருப் பெயர்ச்சியால் உங்களின் யோகாதிபதியான குருபகவான் பனிரெண்டாம் இடம் மாறுவதால் நன்மை விளையும். இது விருச்சிக ராசிக்காரர்களுக்கு சாதகமான நிலை என்று தான் சொல்ல வேண்டும்.
எல்லாவற்றையும் விட மேலாக விருச்சிக ராசியினர் அனுதினமும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் சனிப் பெயர்ச்சி இன்று நடக்கிறது. இனிமேல் உங்களுக்கு வரப் போகும் எல்லா நல்லவைகளையும் பெற்றுத் தரக் கூடிய ஆரம்ப மாற்றமாக இந்த ராகு-கேது பெயர்ச்சி இருக்கும்.
தன்னம்பிக்கை:
சர்ப்ப கிரகங்கள் மூன்று, ஒன்பதாம் இடங்களில் வருவதன் மூலம் உதவி ஸ்தானம் மிகுந்த வலுப்பெறும். இந்த இடம் தைரியம் மற்றும் கீர்த்தியை குறிப்பதால் இதுவரை எதற்கும் பயந்து கொண்டு தன்னம்பிகை இன்றி இருந்த விருசிகத்தினர் இழந்த நம்பிக்கையை மீண்டும் பெறுவீர்கள்.
எதிர்மறை எண்ணம்:
இதுவரை நடந்த எதிர்மறை பலன்களால் கலங்கிப் போய், எனக்கு என்ன நடந்து கொண்டு இருக்கிறது, ஏன் எனக்கு அனைத்திலும் தோல்வி கிடைக்கிறது, என்று தைரியம் இழந்து கலங்கித் தவித்துக் கொண்டிருக்கும்விருச்சிக ராசி இளைய பருவத்தினருக்கு, தைரியத்தையும், புத்துணர்ச்சியும் ஊட்டி அவர்களை சாதனை செய்பவர்களாக மாற்றும் வேலையினை மூன்றாமிடத்தில் மாறியிருக்கும் கேது செய்வார்.
ஒன்பதாம் இடம்:
ராகு பகவான் ஒன்பதாம் இடத்திற்கு வருவது நன்மைகளைத் தராது என்று பலர் சொல்லக் கேட்டிருந்தாலும், ராகு இப்போது செல்லும் இடம் அவருக்கு மிகவும் பிடித்த கடக வீடு என்பதால் பெரிய துன்பங்கள் எதையும் விருச்சிக ராசிக்கு நிச்சயமாக கொடுத்து விட மாட்டார்.
அதைவிட மேலாக கடந்த சில வருடங்களாக சனி கொடுத்துக் கொண்டிருக்கும் துன்பங்களை விட, வேறு எந்த ஒரு கிரகமும் அதிகமான தீமைகளையோ, மனக் கஷ்டங்களையோ விருச்சிகராசிக்கு கொடுத்து விட முடியாது.
தொழில் துறை:
வேலை அமைப்புகளில் இதுவரை நல்லது கிடைக்காத நிலைமை விருச்சிகத்திற்கு இருந்திருக்கும். அது மாறத் துவங்கி ராகு-கேது பெயர்ச்சிக்கு பிறகு நழுவிப் போன அனைத்து வாய்ப்புகளும் இப்போது தானே தேடி வரும்.
அதைவிட மேலாக ஏற்கனவே வாய்ப்புக் கிடைத்தும் அதை சரியாக செய்ய முடியாமல், கிடைத்த வாய்ப்பினை நழுவ விட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிரகங்களால் கொடுக்கப்படுகிறது.
தொழில் முன்னேற்றம் மற்றும் விரிவாக்கத்திற்கான அனைத்தையும் தற்போது நல்ல விதமாகச் செய்ய முடியும். தடைகள் அனைத்தும் நீங்குவதால் ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். தொழிலில் பங்குதாரர்களை சேர்த்துக் கொள்வதற்கு நல்ல நேரம் இது. அவர்கள் மூலம் முன்னேற்றங்கள் இருக்கும்.
குடும்பம்:
கணவன் மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் இருக்கும். குழந்தைகளின் எதிர் காலத்துக்கு முதலீடு செய்ய முடியும். பிள்ளைகள் விரும்பிய பள்ளி, கல்லூரிகளில் அவர்களை சேர்க்க முடியும்.
குடும்பப் பிரச்னை காரணமாக பிரிந்திருந்த கணவன் மனைவியர் ஒன்று சேருவீர்கள். விவாகரத்து வரை போன தம்பதிகள் வழக்கைத் திரும்பப் பெற்று சமரசமாகி திரும்ப இணைவீர்கள்.குடும்பத்தில் மங்களகாரியங்கள் நடக்கும் என்பதால் வருமானம் வந்தாலும் அதற்கு ஏற்ப சுபச்செலவுகளும் இருக்கும்.
விசாகம்:
எல்லா சோதனைகளையும் வெற்றியாக, சாதனைகளாக மாற்றக் கூடியவர் நீங்கள் என்பதால் இந்த ராகுகேதுப்பெயர்ச்சி உங்களுக்கு நன்மைகளையே அதிகம் தரும்.
எதிர்கால நல்வாழ்விற்கு தேவையான அடிப்படைக் கட்டமைப்புக்கள் இப்போது உங்களுக்கு நடக்கும். குலதெய்வத்தின் அருளைப் பெற வேண்டிய நேரம் இது என்பதால் முறையாக குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்.
அனுஷம்:
சனி பகவான் உங்கள் நட்சத்திர அதிபன் என்பதாலும் அவர் இன்னும் சில வாரங்களில் உங்கள் ராசியில் இருந்து விலகப் போவதாலும் மிகப் பெரிய கஷ்டங்கள் எதுவும் இனிமேல் உங்களுக்கு இல்லை.
எதையும் சமாளிக்கும் ஆற்றல் உள்ள உங்களுக்கு இந்த வருடம் நன்றாகவே இருக்கும்.
கேட்டை:
வெளிநாட்டு தொடர்பால் இந்த வருடம் நன்மை அடைவீர்கள். தந்தைவழி உறவில் மிகவும் நல்ல பலன்கள் உங்களுக்கு இருக்கும். கணிதம் சாப்ட்வேர் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு இம்முறை ஏதேனும் பரிசு அல்லது விருது கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
வேலையில் பாராட்டப்படுவீர்கள். பெயர்ச்சியின் ஆரம்பத்தில் சிறிது குறைவான பலன்கள் இருந்தாலும் நடுப்பகுதியில் இருந்து நல்ல பலன்கள் நடக்கத் துவங்கி படிப்படியாக முன்னேற்றம் இருக்கும்.
பரிகாரங்கள்:
ராகு கேது பெயர்ச்சி நடந்தபிறகு ஒருமுறை ஜென்ம நட்சத்திரத்திற்கு முதல் நாள் மாலை சூரியன் அஸ்தமிக்கும் முன்பே காலஹஸ்திக்குச் சென்று இரவு தங்கி அதிகாலை எம்பெருமான் காளத்திநாதனுக்கும் அன்னை ஞானப் பிரசுன்னாம்பிகைக்கும் நடக்கும் ருத்ராபிஷேகத்தில் கலந்து கொண்டு திரும்புங்கள். நிறைந்த பலன் கிடைக்கும்.
No comments:
Post a Comment